Thursday, March 26, 2009

மழை நாளில் தயிர் சாதம் with ப்ரூ காபி


நேற்று இரவு துபாயில் ஆலங்கட்டி மழை...கண் கொள்ளா காட்சியா இருந்தது.கோடை கால தொடக்கம் இங்கே, ஆனாலும் கடந்த இரண்டு நாளா மேகமூட்டத்துடன் சூட்டை தனித்துக்கொண்டிருக்கிறது.மழை என் நினைவுகளை கொஞ்சம் பின்னாடி கொண்டுபோயிடுச்சு.

சின்ன வயசில் மழை பெய்யும் பொழுது யார் வீட்டில் விளையாடிட்டு இருந்தாலும் உடனே எங்க வீட்டுக்கு ஓடி வந்திடுவேன்.சின்னதா ஒரு தாழ்வாரம் எங்க வீட்டில் இருந்துச்சு அங்க மழை தண்ணி புடிக்கறதுக்காக அண்டா,குண்டா, தவலைனு(பாத்திரங்களோட பேரு) வெச்சிருப்பாங்க.மழையில நனைஞ்சிட்டே இந்த பாத்திரங்களோட விளையாடுறது ரொம்ப பிடிக்கும்.

அப்பவெல்லாம் மழைதண்ணி தங்கத்துக்கு சமம்..ஏன்னா குடிக்கறதுக்கு மட்டும் நல்ல தண்ணி கிடைக்கற ஊர் அது. அதுல மழை தண்ணில துணி துவைச்சா நல்லா அழுக்கு போகும்கறதால..தண்ணியை சிமெண்ட் தொட்டில ரெண்டோ மூணோ மாசத்துக்கு பத்திரமா வெச்சிருப்பாங்க.அந்த தண்ணியை வெளையாடுறதுக்கு எடுத்துட்டோம்னா அவ்வளவு தான்...எது அம்மா கையில கிடைக்குதோ அன்னைக்கு அதுல தான் பூஜை.

பத்தாவது படிக்கும் போது மறுபடியும் வீடு மாறிட்டோம்.இந்த வீட்டை சுத்தி ரெண்டாள் உயரத்துக்கு காம்பவுண்டு சுவர்.எப்பவும் கோட்டைக்குள்ளே இருக்கற மாதிரி ஒரு பீலிங்.இந்த வீட்டுக்கு பாட்டி வீட்டிலிருந்த அக்காவும் வந்துட்டா.பக்கத்திலேயே நூலகம் இருந்ததால தினம் தினம் புத்தகம் எடுத்துட்டு வருவேன்.தூங்கற நேரம் தவிர எல்லா நேரமும் புத்தகம் படிச்சிட்டே இருப்பேன்..ஆனா பள்ளி பாடங்களை படிக்கற கெட்டபழக்கம் மட்டும் இருக்கலை.

மழை மாதிரியே ரொம்பவும் பிடிச்சது தயிரும்,ப்ரூ காபியும்.அம்மா அடிக்கடி திட்டிகிட்டே இருப்பாங்க... இவ குடிக்கற காபிக்கும்,சாப்பிடற தயிருக்கும் பத்து எருமை இருக்கிற வீட்டில தான் கட்டிக்கொடுக்கணும்னு.இதை கேட்டுட்டிருந்த அக்கா சொன்னா..இவளை பார்த்தவுடனே பத்து எருமையும் ஓடிப்போயிரும்னு...அந்தளவு என்னோட ஒன்றிபோயிருந்தது.

இந்த வீட்டிலும் அக்காவோட மழையில் ஒரே கொண்டாட்டம் தான்.மழை வந்தா அன்னைக்கு கண்டிப்பா ராத்திரியில் கரண்ட்டும் இருக்காது கொசுக்கடியால் தூக்கமும் வராது.அப்ப நேரம் போகணும்னு லாந்தர்(விளக்கு)பொருத்தி வெச்சுகிட்டு கதை புத்தகம் படிச்சிட்டு இருப்பேன்.இப்படியே விடிகாலை ரெண்டோ மூணோ மணியாயிடும்..நல்லா பசியெடுக்கும்,நேரா சமையல் ரூமுக்கு போயி நானே காபி தயார் பண்ணிட்டு அதோட சாப்பாட்டில் தயிரையும் ரசத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துட்டு வந்து..அப்புறம் என்ன ஒரு வாய் சாதம் ஒரு வாய் காபினு அஞ்சு மணி வரைக்கும் ஓடும்.

இதை சாப்பிட்டு முடிக்கறதுகுள்ள தூக்கம் கண்ணை அசத்தும்.அப்படியே தூங்கிட்டு எட்டு மணிக்கு அரக்க பரக்க எழுந்திருச்சு ஸ்கூலுக்கு ஓடுவேன்.இப்படி எத்தனையோ நாள்,வருஷங்கள் என் கூட இந்த மூணும் இருந்தது.இப்ப என்னால இப்படி ஒரு காம்பினெஷனில் சாப்பிடமுடியுமானு தெரியலை.இப்ப கொழுப்புசத்து நீக்கப்பட்ட பாலும் தயிருனு ஆயிடுச்சு. இப்ப எப்பவாவது ஹோட்டலில் மட்டும்னு தான் காபினு ஆயிடுச்சு.

எதேச்சையா நேத்து ஹோட்டலிருந்து வந்த பார்சலில் ஒரு கப் காபியும் இருந்தது.மழையை ரசிச்சுகிட்டே காபியும் குடிச்சேன். தயிர் சாதம் மட்டும் துணைக்கு இல்லை.இப்பவும் மாறாம இருக்கறது மழை பெய்யும்போது வீட்டில் இருக்கணும்னு நினைக்கறது.

Sunday, March 8, 2009

மகளிர் தினம்

எனக்கு தெரிந்து ஒரே ஒரு தடவை தான் மகளிர் தினத்தை கொண்டாடினேன்.அது பெங்களூரில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியின் ஒரு யூனிட்டில் வேலை செய்தபொழுது.
நமக்கு வேலையே ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணறது தான்..அதுவும் காலையில் மட்டும் தான் வேலை இருக்கும் அதுக்கப்புறம் போன் பண்றது,வர்ற போனுக்கு பதில சொல்லறது,அப்படியே ஹெச்.ஆரில் கொஞ்சம் வேலை அதுகூட இன்டஸ்டிரியல் இஞ்ஜினியரும்,பினிஸ்சிங் யூனிட் க்யூ.சி (பொண்ணுக)கூட மிச்ச பொழுது ஓட்டறதுனு இருந்த போது தான் ஒரு நா சோஷியல் வெல்பேரில் இருந்து கொஞ்ச பேரு வந்து மீட்டிங் போட்டாங்க.


புதுசு புதுசா நிறைய திட்டங்களை சொன்னாங்க.அதுல ஒண்ணு தான் மகளிர் தின கொண்டாட்டம்.செலவு எல்லாம் யூனிட்டே செய்யனும்னு சொல்லிட்டாங்க.நாங்க தான் முப்பெரும் தேவியர் இருக்கோமே,பொறுபெல்லாம் எங்ககிட்ட.அப்புறம் கேக்கவாவேணும்? முதல் வேலையா பண வசூலை ஆரம்பிச்சோம் அதுல சிக்கல் என்னன்னா ஆம்பிளைக யாரும் பண உதவி செய்ய தயாரா இல்லை..எல்லார்கிட்டேயும் ஒரே பதில்....மகளிர் கொண்டாட்டத்துக்கு நாங்க எதுக்கு கொடுக்கணும்னு.ஆனாலும் விடாமுயற்சி பண்ணி ஓரளவு வசூல் பண்ணிட்டோம்.

நம்மளை நம்பி கொடுத்த பொறுப்பை நல்லா செய்யணுமேனு டென்சன் வேற.என்ன பண்றதுனு யோசிச்சு மியூசிக்கல் சேர்,பானை உடைக்கறது,கயிறு இழுக்கறது மற்றும் ஓட்டபந்தயம் வெக்கலாமனு முடிவு பண்ணினோம்.ஆனா பங்கெடுக்க லேடீஸை கொண்டுவர ஒவ்வொரு தடவையும் இன்சார்ஜூக கிட்ட அனுமதி வாங்கணும்,அதுக்கு அவங்க பண்ணின பிகு கொஞ்ச நஞ்சமல்ல.போட்டிகளில் ஜெயிக்கறவங்களுக்கு பரிசு வேற கொடுக்கணும்.

மகளிர் தினத்தன்னைக்கு காலையில எல்லா பெண்களுக்கும் பூ கொடுக்கணும்,யூனிட் பூராவும் கலர் பேப்பர் ஒட்டி,வெல்கம் ஃபோர்டு ஒண்ணையும் வெக்கணும் அதுகூட ஸ்வீட் எல்லாருக்கும் கொடுக்கணும், தலைமை தாங்க வரவுங்களுக்கு பூகொத்து வாங்கணும்னு முடிவு பண்ணினோம்.ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸான மாதிரி இருந்துச்சு.வேற என்ன டேன்ஸ் தான்.

பாட்டை முடிவு பண்ணி பிராக்டீஸிம் ஆரம்பிச்சாச்சு. ஒரு சோலோவும், எட்டு பேரோட ஒரு க்ரூப்பும் செலக்ட் பண்ணினோம்.அப்பவும் இன்சார்ஜீக டார்கெட் டார்கெட்டுனு பொலம்பிகிட்டே இருந்தாங்க.எப்படியோ விழா முடிஞ்சா போதும்னு ஆயிருச்சு.மகளிர் தினமும் வந்தச்சு, சாயங்காலமா விழாவுக்கு முக்கிய விருந்தாளியா கம்பெனியோட முதலாளி அம்மா(இத்தாலியர்)வந்திருந்தாங்க.மகளிர் தினத்தை பத்தி கன்னடாவில் கொஞ்சம் பேசீனாங்க.

நடனம் பாட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு பரிசளிப்பு நடந்தது.அதுக்கப்புறம் எல்லாருக்கும் இனிப்பை வழங்கினோம்.பிறகு ஒரு நாள் ஜி.எம். ஹெச்.ஆர் வந்து எங்களையெல்லாம் ரொம்பவே பாராட்டினார்.எல்லா யூனிட்டை விட எங்க யூனிட்டில் தான் நிகழ்ச்சியெல்லாம் சிறப்பா இருந்ததும்னு சொன்னார்.எங்க மேனேஜருக்கு ஒரே பெருமை...பின்ன இருக்காதா இந்த நிகழ்ச்சிக்கு ஒத்த பைசா கூட குடுக்காம, வாங்கி வெச்ச இனிப்பில் ஒரு கிலோ எடுத்துட்டு போனதுமில்லாம முதலாளிகிட்டே நல்ல பேர் கிடைச்சதும்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.